போனஸ் வழங்காததை கண்டித்து வாலிநோக்கம் உப்பு நிறுவனத்துக்கு பூட்டு போடும் போராட்டம்


போனஸ் வழங்காததை கண்டித்து வாலிநோக்கம் உப்பு நிறுவனத்துக்கு பூட்டு போடும் போராட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:30 PM GMT (Updated: 8 Nov 2018 6:42 PM GMT)

போனஸ் வழங்காததை கண்டித்து வாலிநோக்கம் உப்பு நிறுவன தொழிலாளர்கள் பூட்டுபோடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளர்கள், போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சாயல்குடி,

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்காத மேலாண்மை இயக்குரை கண்டித்து கடந்த 10 நாட்களாக தொழிலாளர்கள் உப்பு நிறுவனத்தில் வேலையை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரை நிர்வாணம், கஞ்சிகாய்ச்சும் போராட்டம், தீபாவளியன்று வீடுகளில் கருப்புக்கோடி ஏந்திய போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதையடுத்து நேற்று உப்பு நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க தலைவர் பச்சமால், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி, தொழிற்சங்க செயலாளர் குமர வடிவேல், துணை தலைவர்கள் தனிராமு, ராஜேந்திரன், பொருளாளர் முருகன், துணை செயலாளர் காட்டுராஜா உள்ளிட்டோரும், தொழிலாளர்களுக்கு ஆதரவாக சாயல்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்செழியன், மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டியன், ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வகிதா சகுபர், இளங்கோவன் உள்பட தி.மு.க. நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது உப்பு நிறுவனத்திற்கு பூட்டுபோடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக கடலாடி தாசில்தார் உடனடியாக மாவட்ட கலெக்டர் வீரராகவராவுக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு மாவட்ட கலெக்டர் அழைத்துள்ளார். இதன் காரணமாக தொழிலாளர்கள் நேற்று தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.

Next Story