தூத்துக்குடியில் மூதாட்டியை தாக்கி 18 பவுன் நகை பறிப்பு போலீஸ் விசாரணை


தூத்துக்குடியில் மூதாட்டியை தாக்கி 18 பவுன் நகை பறிப்பு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Nov 2018 9:30 PM GMT (Updated: 8 Nov 2018 6:58 PM GMT)

தூத்துக்குடியில் மூதாட்டியை தாக்கி 18 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மூதாட்டியை தாக்கி 18 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி

தூத்துக்குடி-மதுரை ரோடு மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஐசக். இவருடைய மனைவி பிரிஸ்மில்லா (வயது 43). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ஐசக் இறந்து விட்டார். பிரிஸ்மில்லாவின் மாமியார் கமலாராஜ் (85). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள பிரிஸ்மில்லாவின் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவரை பார்க்க சில நாட்களுக்கு முன்பு பிரிஸ்மில்லா குழந்தைகளுடன் சென்று விட்டார். இதனால் கமலாராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

18 பவுன் பறிப்பு

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் மாலையில் திபுதிபுவென வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கு இருந்த கமலாராஜை தாக்கி அவர் முகத்தில் தலையணையால் அழுத்தி கீழே தள்ளிவிட்டனர். பின்னர் அவர்கள் கமலாராஜின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலிகள், வளையல், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 18 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கமலாராஜ், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். மேலும் பிரிஸ்மில்லாவிற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பிரிஸ்மில்லா சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story