சென்னை காசிமேட்டில் 300 நட்சத்திர ஆமைகள் சிக்கின விமானம் மூலம் மலேசியா கடத்த முயற்சி


சென்னை காசிமேட்டில் 300 நட்சத்திர ஆமைகள் சிக்கின விமானம் மூலம் மலேசியா கடத்த முயற்சி
x
தினத்தந்தி 8 Nov 2018 10:45 PM GMT (Updated: 8 Nov 2018 7:04 PM GMT)

சென்னை காசிமேட்டில் 300 நட்சத்திர ஆமைகளை போலீசார் கைப்பற்றினர். அவற்றை விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக ராயபுரம் உதவி கமிஷனர் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கையில் அட்டை பெட்டிகளுடன் வந்த 2 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் அவற்றை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த 2 அட்டை பெட்டிகளையும் போலீசார் சோதனை செய்தபோது, அதில் 300 நட்சத்திர ஆமைகள் இருந்தன. அதில் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் என்ற முகவரி ஒட்டப்பட்டு இருந்தது.

மலேசியாவுக்கு...

அந்த நட்சத்திர ஆமைகளை கடல் வழியாக கடத்தி வந்த மர்மநபர்கள், அதனை சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story