தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பினர் விடிய, விடிய போக்குவரத்தை சீரமைத்த போலீசார்


தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பினர் விடிய, விடிய போக்குவரத்தை சீரமைத்த போலீசார்
x
தினத்தந்தி 9 Nov 2018 12:00 AM GMT (Updated: 8 Nov 2018 7:17 PM GMT)

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்று இருந்த பொதுமக்கள், சென்னை திரும்பி வந்தனர். பெருங்களத்தூரில் விடிய, விடிய போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டதால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.

தாம்பரம், 

சென்னையில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தீபாவளி பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து அதிக அளவிலான பொதுமக்கள், கார்களிலேயே சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர்.

தீபாவளி விடுமுறை முடிந்து, கார்களில் சென்றவர்கள் நேற்று முன்தினம் மாலை முதலே சென்னை திரும்பி வரத்தொடங்கினர். வழக்கமாக பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் வாகனங்களால் பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு அதேபோல போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஏ.அருண் மேற்பார்வையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

போக்குவரத்து சீரமைப்பு

அதன்படி தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் 6 போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 25 சப்-இன்ஸ்பெக்டர்கள், 150-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைக் கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்றுமுன்தினம் மாலையில் தொடங்கி விடிய, விடிய போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணி முதல் அதிக அளவு கார், ஆம்னி பஸ்கள், அரசு விரைவு பஸ்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அணிவகுத்து வந்தன.

தாம்பரத்தில் இருந்து வண்டலூர் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு போலீசார் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். கார் போன்ற வாகனங்களை சாலையின் வலது புறத்திலும், பயணிகளை ஏற்றிவரும் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்களை இடது புறத்திலும் வருமாறு போக்குவரத்தை மாற்றி அமைத்தனர்.

நெரிசல் இல்லை

பயணிகளை இறக்கி செல்லும் பஸ்களை தவிர மற்ற வாகனங்களை சாலையில் நிறுத்தக்கூடாது எனக்கூறி போக்குவரத்தை மாற்றியதால் போக்குவரத்து சீராக சென்றது. எந்த இடத்திலும் வாகனங்கள் நிற்காததால் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற் படவில்லை.

வாகனங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக எங்கும் நிற்காமல் நகர்ந்தபடியே இருந்தது. கனரக வாகனங்கள், வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் எந்த இடையூறும் இன்றி எளிதாக சென்றனர்.



இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வழக்கமாக பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் சென்னையில் உள்ள பொதுமக்கள் தென் மாவட்டங்களில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு செல்லும்போதும், விடுமுறைக்குப்பின் சென்னை திரும்பி வரும்போதும் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

ஆனால் இதுபோல நடக்காமல் இருக்க அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு அதிக அளவில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தி, நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனால் வாகனங்களை எங்கும் நிற்கவிடாமல் தொடர்ந்து நகர்த்திக்கொண்டே இருந்ததால் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக வாகனங்கள் அதிகமாக வந்ததால் சீரான வாகன போக்குவரத்து பாதிப்படைந்தது. இருப்பினும் போக்குவரத்து எங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக இருந்ததால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் சென்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

இடையூறு இல்லை

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது வழக்கம். பின்னர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும்போது செங்கல்பட்டில் இருந்து கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

அவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது பொதுமக்கள் அதில் சிக்கி பெருங்களத்தூர் பகுதியை கடந்து செல்லவே பல மணி நேரம் ஆகும். இதனால் அனைவரும் அவதிப்பட்டு வந்தோம். ஆனால் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பியபோது எங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் அனைத்தும் நகர்ந்தபடியே இருந்தது. இதனால் எந்த இடையூறும் இன்றி எளிதாக உரியநேரத்துக்கு எங்களால் வந்துசேர முடிந்தது.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story