லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளருக்கு மேலும் ஒரு நாள் காவல் நீட்டிப்பு


லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளருக்கு மேலும் ஒரு நாள் காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 9:45 PM GMT (Updated: 8 Nov 2018 7:21 PM GMT)

லஞ்ச வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளருக்கு மேலும் ஒரு நாள் காவல் நீட்டிப்பு செய்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாபு (வயது 55). இவர் புதிய வேனுக்கு பதிவு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கடந்த செப்டம்பர் மாதம் 11-ந் தேதி விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதோடு இவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்து இருவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த செந்தில்குமார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அலுவலகத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில் பாபுவின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து அவரை கடலூரில் இருந்து போலீஸ் வேனில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அழைத்து வந்து விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து பாபுவிற்கு மேலும் ஒரு நாள் காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி (பொறுப்பு) காந்தி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாபுவை மீண்டும் விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேனில் போலீசார் அழைத்துச்சென்று கடலூர் சிறையில் அடைத்தனர்.

Next Story