போளூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை


போளூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 9:54 PM GMT)

போளூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆரணி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

போளூர்,

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 26), கூலித் தொழிலாளி. இவருக்கும் அத்திமூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் அம்சவள்ளிக்கும் (23) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஷ்ராஜ் (3) என்ற மகன் உள்ளார்.

அசோகன் தினமும் மது குடித்துவிட்டு வருவதாக கூறப்படுகிறது. பலமுறை அம்சவள்ளி கணவரிடம் குடியை நிறுத்துமாறு வலியுறுத்தி வந்தார். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சமீபத்தில் அம்சவள்ளியின் தொடர் முயற்சியால் அசோகன் ‘இனி குடிக்க மாட்டேன்’ என்று கூறி சத்தியம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அம்சவள்ளி மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தீபாவளியன்று அசோகன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்சவள்ளி, சத்தியம் செய்து விட்டு குடித்து விட்டு வருகிறாயா? என்று கேட்டு அவரது கணவரிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அம்சவள்ளி நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டதாக தெரிகிறது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அம்சவள்ளியை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அம்சவள்ளிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், ஆரணி உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story