கள்ளந்திரி பகுதியில் சாக்கடை நீர் தேங்குவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம்


கள்ளந்திரி பகுதியில் சாக்கடை நீர் தேங்குவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 8 Nov 2018 11:16 PM GMT (Updated: 8 Nov 2018 11:16 PM GMT)

கள்ளந்திரி பகுதியில் ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டு அதில் சாக்கடை நீர் தேங்குவதால் அந்த பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கள்ளந்திரி,

மதுரையை அடுத்துள்ள அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள கள்ளந்திரியிலிருந்து சிட்டம்பட்டி வழியாக நான்கு வழிச்சாலைக்குச் செல்லும் மெயின் ரோடு உள்ளது. இந்தநிலையில் கள்ளந்திரி கிராம அலுவலகம் அருகே உள்ள சாக்கடை கால்வாய்கள் சரிவர சுத்தம் செய்யாததால், ஊருக்குள் இருந்து வரும் கழிவு நீர் கால்வாய்களில் செல்லாமல், நேரடியாக ஊரில் உள்ள தெருக்களிலிருந்து மெயின் ரோடுக்கு வந்து தேங்கி விடுகிறது.

இதனால் நான்குவழிச்சாலைக்கு செல்லும் மெயின் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமா காணப்படுகின்றன. இந்த பள்ளங்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த ரோட்டில் உள்ள பள்ளங்கள் வழியாக வாகனங்கள் செல்லும் போது கழிவுநீர் பள்ளங்களில் இருந்து வெளியேறி அந்த பகுதி முழுவதும் பரவி தூய்மையற்று காணப்படுகிறது.

சாக்கடை கால்வாயை கடந்த 7 மாதமாக சரிசெய்யாததால், இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் தற்போது டெங்கு, பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்த பகுதி முழுவதும் சாக்கடை கழிவு நீரால் அசுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் காய்ச்சலால் பாதிப்படைந்து அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும் போது, டெங்கு விழிப்புணர்வு மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தி, சுத்தத்தை வலியுறுத்தி வரும் நிலையில், கள்ளந்திரி ஊராட்சியில் மட்டும் சுகாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. சாக்கடை பிரச்சினை குறித்து ஊராட்சி பணியாளர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.

மேலும் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story