7 மையங்களில் நாளை குரூப்-2 தேர்வு 10.30 மணிக்கு பிறகு வருபவர்களுக்கு அனுமதியில்லை


7 மையங்களில் நாளை குரூப்-2 தேர்வு 10.30 மணிக்கு பிறகு வருபவர்களுக்கு அனுமதியில்லை
x
தினத்தந்தி 9 Nov 2018 10:00 PM GMT (Updated: 9 Nov 2018 4:27 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு நாளை வேலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடக்கிறது. காலை 10.30 மணிக்குமேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வேலூர், 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப்-2 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இதனை எழுத 25 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வு தொடர்பான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்களாக 95 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 18 நடமாடும் குழு, 10 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. 7 மையங்களில் 95 அறைகளில் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மையங்களில் மின்வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளதா என முதன்மை கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். அலுவலக உதவியாளர்கள், ஆய்வுக்கூட உதவியாளர் அல்லது பள்ளி, கல்லூரியை சாராத வேறு நபர்களை நியமனம் செய்யக்கூடாது. தேர்வுக்கு வருபவர்கள் எக்காரணத்தை கொண்டும் மின்னணு சாதனங்களான கால்குலேட்டர், பேஜர், செல்போன் ஆகியவற்றை தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

10.30 மணிக்குமேல் வரும் தேர்வர்களை தேர்வெழுத அனுமதிக்கக்கூடாது. அதேபோன்று தேர்வு முடியும் முன்பு யாரும் வெளியே செல்ல அனுமதி கிடையாது. மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதும் தேர்வுக்கூடத்தில் அவர்களுக்கு தரைத்தளத்தில் உள்ள வகுப்பறையையே ஒதுக்கவேண்டும்.

தேர்வுக்கூட முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வு நாளன்று தேர்வர்களின் வருகை குறித்த விவரத்தை காலை 10.30 மணியில் இருந்து 11 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Next Story