திண்டிவனத்தில் 5 பேரால் தாக்கப்பட்ட டிரைவர், சிகிச்சை பலனின்றி சாவு : கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை


திண்டிவனத்தில் 5 பேரால் தாக்கப்பட்ட டிரைவர், சிகிச்சை பலனின்றி சாவு : கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Nov 2018 9:30 PM GMT (Updated: 9 Nov 2018 5:25 PM GMT)

திண்டிவனத்தில் 5 பேரால் தாக்கப்பட்ட டிரைவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம், 

திண்டிவனம் கிடங்கல்-1 கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் அசோக்குமார் (வயது 25). வேன் டிரைவர். சம்பவத்தன்று இவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் கிடந்த கல் ஒன்றை, அசோக்குமார் எடுத்து வீசியதாக தெரிகிறது. அப்போது அந்த கல் சாலையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஹனிபா மகன் ரகீம்(35) என்பவர் மீது பட்டதாக தெரிகிறது. இதை ரகீம் உள்பட 5 பேர் தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 5 பேரும் சேர்ந்து அசோக்குமாரை தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த அசோக்குமார், சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கிடங்கல்-1 பகுதியை சேர்ந்த ரகீம், முகமது மகன் தாஜா(35), இப்ராகிம் மகன் அப்பாஸ், ராசேந்திரன் மகன்கள் ராமசந்திரன், ராஜி ஆகியோர் மீது திண்டிவனம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அசோக்குமார், சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து ரகீம் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story