போடி: ஸ்டூடியோ கடைக்காரர் கொலையில் கொத்தனார் கைது


போடி: ஸ்டூடியோ கடைக்காரர் கொலையில் கொத்தனார் கைது
x
தினத்தந்தி 9 Nov 2018 9:45 PM GMT (Updated: 9 Nov 2018 7:04 PM GMT)

போடியில் ஸ்டூடியோ கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

போடி,

போடி குப்பளகிரி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வபாண்டியன் (வயது 45). இவர் திருமலாபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் ஸ்டூடியோ நடத்தி வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், சர்மிளாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்தீஸ்வரன் (25). கொத்தனார். தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு இவர் தனது நண்பர்களுடன் செல்வபாண்டியின் ஸ்டூடியோ முன்பு குடிபோதையில் தகராறு செய்து உள்ளார். அவர்களை செல்வபாண்டியன் கண்டித்து அனுப்பினார். மீண்டும் மாலை நேரத்தில் அவர்கள் வந்து தகராறு செய்து உள்ளனர். இதனால் செல்வபாண்டியன் போலீசில் புகார் செய்து உள்ளார். போலீசார் வந்ததும் கார்த்தீஸ்வரனும் அவரது நண்பர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கார்த்தீஸ்வரன், செல்வபாண்டியன் கடைக்கு வந்து நீ எப்படி போலீசில் சொல்லலாம்? என்று கூறி தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் அவர் செல்வபாண்டியனை 11 இடங்களில் கத்தியால் குத்தி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த செல்வபாண்டியன் அலறல் சத்தம் போடவே கார்த்தீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனிடையே செல்வபாண்டியனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வபாண்டியன் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுகுறித்து போடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் ராஜலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது செல்வபாண்டியனை கார்த்தீஸ்வரன் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் கார்த்தீஸ்வரன் மேலசொக்கநாதபுரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கார்த்தீஸ்வரனை கைது செய்தனர்.

Next Story