சென்னை புரசைவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் நீதிபதி படுகாயம்


சென்னை புரசைவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் நீதிபதி படுகாயம்
x
தினத்தந்தி 9 Nov 2018 10:30 PM GMT (Updated: 9 Nov 2018 8:18 PM GMT)

சென்னை புரசைவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் நீதிபதி படுகாயம் அடைந்தார்.

சென்னை,

சென்னை கெல்லீசில் உள்ள இளம் சிறார் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் சண்முக பிரியா (வயது 39). இவர் சைதாப்பேட்டை நீதிபதி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

நீதிபதி சண்முக பிரியா நேற்று காலையில் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக கெல்லீசுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வாலிபர் ஒருவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள், சண்முக பிரியா மீது மோதியது. இதில் சண்முக பிரியாவும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த கொசப்பேட்டையை சேர்ந்த முத்துவை (30) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story