வேளச்சேரியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் பாதிப்பு


வேளச்சேரியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2018 11:00 PM GMT (Updated: 9 Nov 2018 8:30 PM GMT)

வேளச்சேரியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர்.

ஆலந்தூர், 

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் வேளச்சேரி 178-வது வட்டத்துக்கு உட்பட்ட வேளச்சேரி இரட்டை பிள்ளையார் கோவில் தெரு, வள்ளலார் தெரு, பாரதி தெரு, அண்ணா தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் கடந்த 1½ ஆண்டுகளாக அடிபம்பு குழாய்களில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து சாக்கடையாக வருகிறது. இதனால் அந்த குடிநீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுபற்றி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கழிவுநீர் கலந்த இந்த குடிநீரை பயன்படுத்தினால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் பணம் கொடுத்து குடிநீர் கேன்கள் வாங்குவதாகவும், கழிவுநீர் கலந்து வரும் குடிநீருக்கு வரியும் செலுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story