பணமதிப்பிழப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு 2-ம் ஆண்டு நிறைவு: மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் பெங்களூருவில் நடந்தது


பணமதிப்பிழப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு 2-ம் ஆண்டு நிறைவு: மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் பெங்களூருவில் நடந்தது
x
தினத்தந்தி 9 Nov 2018 10:45 PM GMT (Updated: 9 Nov 2018 8:47 PM GMT)

பணமதிப்பிழப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு 2-ம் ஆண்டு நிறைவையொட்டி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெங்களூரு, 

பணமதிப்பிழப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு 2-ம் ஆண்டு நிறைவையொட்டி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பணமதிப்பிழப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு 2-ம் ஆண்டு நிறைவையொட்டி மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் நேற்று பெங்களூரு அனந்தராவ் சர்க்்கிளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மந்திரி ஜமீர்அகமதுகான், முன்னாள் மந்திரிகள் ரோஷன் பெய்க், ராமலிங்கரெட்டி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:-

சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டன

1991-ம் ஆண்டு இந்தியா தனது தங்கத்தை அடமானம் வைக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையை அடைந்தது. அதன் பிறகு வந்த நிதித்துறை மந்திரி மன்மோகன்சிங், நாட்டின் பொருளாதாரத்தை சரியான நிலைக்கு கொண்டு வந்தார்.

மோடி நாட்டின் பிரதமராக வந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 8-ந் தேதி அன்று பணமதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தார். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். சிறுதொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கானவர்கள் வேலையை இழந்தனர்.

மோடியால் முடியவில்லை

இப்போது ரிசர்வ் வங்கியிடம் உள்ள பணத்தை தரும்படி மோடி அரசு நெருக்கடி கொடுக்கிறது. நாட்டை முன்னேற்ற மோடியால் முடியவில்லை. இதனால் மக்களின் கவனத்தை திசை திருப்ப ராமர்கோவில் விவகாரத்தை கையில் எடுக்கிறார்.

நாட்டை முன்னேற்றம் அடைய செய்ய பா.ஜனதாவால் முடியாது. காங்கிரசால் மட்டுமே நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் பேசினார்.

Next Story