ராமநத்தம் அருகே: வாகனம் மோதி வாலிபர் பலி - பிணத்தை பார்த்தபடி சாலையை கடந்தவர் கார் மோதி படுகாயம்


ராமநத்தம் அருகே: வாகனம் மோதி வாலிபர் பலி - பிணத்தை பார்த்தபடி சாலையை கடந்தவர் கார் மோதி படுகாயம்
x
தினத்தந்தி 9 Nov 2018 9:30 PM GMT (Updated: 9 Nov 2018 8:55 PM GMT)

ராமநத்தம் அருகே வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது பிணத்தை பார்த்தபடி சாலையை கடந்தவர் கார் மோதி படுகாயம் அடைந்தார்.

ராமநத்தம், 

ராமநத்தம் அருகே உள்ள ஆலம்பாடியை சேர்ந்தவர் கலியன். இவரது மகன் காமராஜ் (வயது 30). இவரது மனைவி உமாராணி. சம்பவத்தன்று காமராஜ் விழுப்புரம் மாவட்டம் இறஞ்சியில் உள்ள மாமனார் வீட்டில் தங்கியிருந்த தனது மனைவி உமாராணியை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஆலம்பாடிக்கு வந்தார்.

பின்னர் உமாராணியை வீட்டில் விட்டு விட்டு, அவர் ஆவட்டி அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று காமராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது காமராஜ் இறந்து கிடந்ததை பார்த்துக்கொண்டு சாலையை கடக்க முயன்ற 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது, சென்னையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான காமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு, விபத்தில் காயமடைந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? காமராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story