தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கும் திட்டம் வருகிற 22-ந் தேதி குமாரசாமி தொடங்கி வைக்கிறார்


தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கும் திட்டம் வருகிற 22-ந் தேதி குமாரசாமி தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 9 Nov 2018 10:00 PM GMT (Updated: 9 Nov 2018 8:56 PM GMT)

தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி வருகிற 22-ந் தேதி தொடங்கி வைக்கிறார் என்று மந்திரி பண்டப்பா காசம்பூர் கூறினார்.

பெங்களூரு, 

தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி வருகிற 22-ந் தேதி தொடங்கி வைக்கிறார் என்று மந்திரி பண்டப்பா காசம்பூர் கூறினார்.

கூட்டுறவுத்துறை மந்திரி பண்டப்பா காசம்பூர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கூட்டுறவு ரத்னா விருது

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பூஜ்ஜிய வட்டியில் ரூ.3 லட்சம் வரைக்கும், 3 சதவீத வட்டியில் ரூ.10 லட்சம் வரைக்கும் கடன் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அகில இந்திய கூட்டுறவு வார விழா வருகிற 14-ந் தேதி தொடங்கி ஒரு வாரம் நடக்கிறது. கூட்டுறவு அமைப்புகளை சிறப்பான முறையில் கட்டமைத்தவர்களுக்கு கூட்டுறவு ரத்னா விருது வழங்கப்படும். கிராமப்புற பெண்கள் சொந்த தொழில் செய்ய ‘காயக’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம்.

ரூ.10 ஆயிரம் வரை கடன்

அதேபோல் தெருவோர வியாபாரிகளுக்கு உதவ ‘ஏழைகளின் உறவு’ என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்தை வருகிற 22-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை பூஜ்ஜிய வட்டியில் கடன் வழங்கப்படும்.

இந்த கடன் தொகையை தினமும் தவணை முறையில் திரும்ப செலுத்தலாம். உதாணரத்திற்கு தினமும் ரூ.100 செலுத்த வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் கடன் பெற ஆதார் எண் மட்டும் இருந்தால் போதும். கந்துவட்டி தொழிலை ஒழிக்கும் நோக்கத்தில் இந்த திட்டத்தை மாநில அரசு தொடங்குகிறது.

ராஜினாமா செய்யவும் தயார்

மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் நடைபெறும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு கூடுதலாக மின்சாரத்துறை வழங்கினால், அதை சரியான முறையில் நிர்வகிக்க தயாராக இருக்கிறேன். நெருக்கடியான நிலை ஏற்பட்டால், நான் மந்திரி பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்.

திப்பு ஜெயந்தி விழாவுக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்ததால் தான் அந்த கட்சிக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை. விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் இதுவரை சுமார் 10 ஆயிரம் விவசாயிகள் ரூ.1,050 கோடிக்கு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.

கடன் தள்ளுபடி கடிதங்கள்

அவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் கடன் தள்ளுபடி கடிதங்கள் வழங்கப்படும். திப்பு ஜெயந்தி விழாவில் முதல்-மந்திரி குமாரசாமியால் கலந்துகொள்ள முடியவில்லை. எங்கள் கட்சி சார்பில் மந்திரி வெங்கடராவ் நாடகவுடா கலந்து கொள்கிறார்.

இவ்வாறு பண்டப்பா காசம்பூர் கூறினார்.

Next Story