பிரதமரை உயிருடன் எரிக்க வேண்டும் என பேச்சு: முன்னாள் மந்திரி ஜெயச்சந்திராவுக்கு எடியூரப்பா கண்டனம்


பிரதமரை உயிருடன் எரிக்க வேண்டும் என பேச்சு: முன்னாள் மந்திரி ஜெயச்சந்திராவுக்கு எடியூரப்பா கண்டனம்
x
தினத்தந்தி 9 Nov 2018 10:30 PM GMT (Updated: 9 Nov 2018 9:08 PM GMT)

பிரதமரை உயிருடன் எரிக்க வேண்டும் என்று பேசிய முன்னாள் மந்திரி ஜெயச்சந்திராவுக்கு எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பிரதமரை உயிருடன் எரிக்க வேண்டும் என்று பேசிய முன்னாள் மந்திரி ஜெயச்சந்திராவுக்கு எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயிருடன் எரிக்க வேண்டும்

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் துமகூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் மந்திரி ஜெயச்சந்திரா, “பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்தால் தன்னை உயிருடன் எரிக்கும்படி பிரதமர் மோடி கூறினார். இந்த திட்டத்தால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. அதனால் பிரதமர் கூறியபடி அவரை மக்கள் உயிருடன் எரிக்க வேண்டும்” என்றார்.ஜெயச்சந்திராவின் இந்த பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வன்மையாக கண்டிக்கிறேன்

பிரதமர் மோடியை உயிருடன் எரிக்க வேண்டும் என்று முன்னாள் மந்திரி ஜெயச்சந்திரா துமகூருவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பேசி இருக்கிறார். பிரதமரை இவ்வளவு மோசமான முறையில் பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜெயச்சந்திராவின் இந்த கருத்து எனக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.

பணமதிப்பிழப்பு திட்டத்தை அமல்படுத்திய பிறகு நடைபெற்ற உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும், பணமதிப்பிழப்பு திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக விரக்தியில் குற்றம்சாட்டுகிறது.

விளக்கம் அளிக்க வேண்டும்

ஜெயச்சந்திராவின் பேச்சுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் விளக்கம் அளிக்க வேண்டும். பிரதமர் மோடியின் செயல்பாடுகளை உலக தலைவர்கள் பாராட்டுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story