சர்கார் திரைப்படத்தில் இலவச டி.வி. குறித்து விமர்சிக்காதது ஏன்? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி


சர்கார் திரைப்படத்தில் இலவச டி.வி. குறித்து விமர்சிக்காதது ஏன்? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி
x
தினத்தந்தி 9 Nov 2018 11:30 PM GMT (Updated: 9 Nov 2018 10:46 PM GMT)

சர்கார் திரைப்படத்தில் இலவச டி.வி. குறித்து விமர்சிக்காதது ஏன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

மதுரை,

மதுரை மகப்பூபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, காந்தி மியூசியத்தில் நடந்த சர்வதேச முதியோர் தின விழாவில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் நடராஜன், ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–

விஜய் ஒரு நல்ல நடிகர். எந்த துறையிலும் முத்திரை பதிக்கக்கூடியவர். ஜெயலலிதா இருக்கும் போது மக்கள் நலத்திட்டங்களை வாழ்த்தி பேசியவர். இப்போது படத்தில் எதிர்க்கிறார். இலவச திட்டங்களுக்கு எதிரான காட்சியில் நடிகர் விஜய் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம்.

விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது என்பது தவறான தகவல். அனைத்து திரையரங்குகளிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தி.மு.க. ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட இலவச டி.வி. குறித்து சர்கார் திரைப்படத்தில் விமர்சனம் செய்யாதது ஏன்?. அதையும் எதிர்ப்பதாக இருந்தால் மக்கள் ஏற்றுக்கொண்டு இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story