ரெயில் நிலையத்தில் தவறவிட்ட நகை- பணம் உரியவரிடம் ஒப்படைப்பு


ரெயில் நிலையத்தில் தவறவிட்ட நகை- பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 9 Nov 2018 10:48 PM GMT (Updated: 9 Nov 2018 10:48 PM GMT)

தஞ்சை ரெயில் நிலையத்தில் தவறவிட்ட நகை- பணத்தை போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணல்மேல்குடியை சேர்ந்தவர் விக்ரம்பாலாஜி(வயது 33). சென்னையில் வசித்துவரும் இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக இவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குடும்பத்துடன் சென்னைக்கு திரும்ப விக்ரம்பாலாஜி தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்தார். ரெயிலில் 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் முன்பதிவு செய்திருந்த அவர் ரெயில் புறப்படும் நேரத்துக்கு சற்று முன் அவசரஅவரமாக ரெயில் நிலையம் வந்தார்.

இதைத்தொடர்ந்து ரெயிலில் ஏறி பயணம் செய்த அவருக்கு பாபநாசத்தை ரெயில் அடைந்த போது தான் கொண்டுவந்த ஒரு பையை தஞ்சை ரெயில் நிலையத்தில் தவற விட்டது ஞாபகம் வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படையினரின் அவசர உதவி எண் 182-ஐ தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறினார். இதைத்தொடர்ந்து தஞ்சை ரெயில்நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த விக்ரம்பாலாஜியின் பையை தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் மீட்டனர். பின்னர் தஞ்சை வந்த அவரிடம் போலீசார் நகை- பணம் இருந்த பையை உரிய விசாரணைக்கு பின் ஒப்படைத்தனர். விக்ரம்பாலாஜி தவற விட்ட பையில் ரூ.25ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி, ரூ.20 ஆயிரம், 15பவுன் நகை, 3செல்போன்கள் மற்றும் வங்கி ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவை இருந்தன.

ரெயில்வே பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கையால் பையில் இருந்த பொருட்கள் திருட்டுபோகாமல் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Next Story