நெடுஞ்சாலைத்துறை இடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்: பொதுமக்கள் அதிர்ச்சி - மாற்று இடம் வழங்க கோரிக்கை


நெடுஞ்சாலைத்துறை இடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்: பொதுமக்கள் அதிர்ச்சி - மாற்று இடம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2018 10:55 PM GMT (Updated: 9 Nov 2018 10:55 PM GMT)

நெடுஞ்சாலைத்துறை இடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அய்யம்பேட்டை,

அய்யம்பேட்டை அருகே நெடுஞ்சாலைத்துறை இடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி வீடுகளை அதிகாரிகள் காலி செய்ய கூறி நோட்டீஸ் வழங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மாற்று இடம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியுடன் இணைந்த 1-வது வார்டு அண்ணாநகர் அய்யம்பேட்டையில் இருந்து உள்ளிக்கடை கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ளது. இங்கு 96 பேர் வீடுகள் கட்டி தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இங்குள்ள வீடுகளை உடனே காலி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்களிடம் நோட்டீஸ் வழங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்த பகுதி மக்கள் நோட்டீசை வாங்க மறுத்தனர். இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-

நாங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் சிறிய அளவில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். இங்கு வசிப்பவர்கள் அனைவருமே கூலித்தொழிலாளர்கள். எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பும், குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்களின் தேவைக்காக கடந்த 2001-ம் ஆண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் சிறிய வாட்டர் டேங்க், அருகில் உள்ள குடமுருட்டி ஆற்றில் படித்துறை, பஸ் நிறுத்தம், இடுகாடு ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் எங்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.

நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சந்தன மாரியம்மன் என்ற கோவிலைக் கட்டி வழிபட்டு வருகிறோம். நாங்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள் என்பதால் சிறுக சிறுக சம்பாதித்த பணம் மூலம் சிறிய அளவில் வீடுகள் கட்டி அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென நெடுஞ்சாலை துறையினர் வீடுகளை ஒரு வாரத்தில் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் கொடுக்க வந்தனர். இதை வாங்க மறுத்து விட்டோம். இது குறித்து கலெக்டரிடம் முறையிட உள்ளோம். எங்களுக்கு அரசு வேறு இடத்தில் வீடுகள் கட்டிக் கொடுத்தால் நாங்கள் தற்போது உள்ள வீடுகளை காலி செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story