நசியனூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணியை கலெக்டர் ஆய்வு


நசியனூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Nov 2018 11:21 PM GMT (Updated: 9 Nov 2018 11:21 PM GMT)

நசியனூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணியை கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார்.

பவானி,

ஈரோடு மாவட்டத்திற்கு உள்பட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் டெங்கு நோய் தடுப்பு பணியை மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று நசியனூர் பேரூராட்சி உள்பட்ட ஆட்டையாம்பாளையம், தயிர்பாளையம், சாமிகவுண்டன் பாளையம், பள்ளத்தூர், தொட்டிபாளையம் பகுதிகளுக்கு கலெக்டர் கதிரவன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று சென்றனர்.

அங்கு வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். காலை 6 மணி முதல் 9.40 மணி வரை ஆய்வில் ஈடுபட்டனர். குடிநீர் தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள், பாத்திரங்கள், பழைய டயர்கள் மற்றும் வீட்டில் தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்றும் தேக்கி வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் கொசுவை உருவாக்கும் லார்வா பூச்சிகள் உள்ளதா? என்றும் பார்த்தனர்.

அப்போது மின்வாரிய ஊழியர் ஒருவர் தன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியை சரியாக பராமரிக்காமல் இருந்ததை கலெக்டர் கண்டுபிடித்தார். இதனால் அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தார். மேலும் ஒவ்வொரு வீடுகளிலும் கொசு மருந்து ஒழுங்காக ஊற்றப்படுகிறதா? என்றும், அதில் எத்தனை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்கிற விவரத்தையும் கேட்டறிந்தார். கொசு தடுப்பு மருந்து ஊற்ற வரும் பணியாளர்களுக்கு ஏதேனும் வீடுகளில் அனுமதி மறுக்கப்பட்டால் அந்த வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் கதிரவன் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாவட்ட சுகாதார துறை உதவி இயக்குனர் சவுண்டம்மாள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜீவானந்தம், வட்டார மருத்துவ அலுவலர் பிரபு, நசியனூர் மருத்துவ அலுவலர் நிர்மலா தேவி, தாசில்தார் அமுதா, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் லலிதாமணி உள்ளிட்ட அதிகாரிகள் கலெக்டருடன் இருந்தனர்.


Next Story