தாளவாடி அருகே வேன்–மோட்டார்சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு


தாளவாடி அருகே வேன்–மோட்டார்சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 9 Nov 2018 11:22 PM GMT (Updated: 9 Nov 2018 11:22 PM GMT)

தாளவாடி அருகே வேனும், மொபட்டும் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள திகினாரையை சேர்ந்தவர் மாதேவப்பா (வயது 50). அதே பகுதியை சேர்ந்தவர் பசுவண்ணப்பா (52). இவர்கள் 2 பேரும் கூலித்தொழிலாளிகள் ஆவர்.

மாதேவப்பாவும், பசுவண்ணப்பாவும் நேற்று காலை மொபட்டில் திகினாரையில் இருந்து கோடிபுரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். தர்மாபுரம் அருகே சென்றபோது தாளவாடியில் இருந்து திகினாரைக்கு சென்று கொண்டிருந்த வேனும் மொபட்டும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் மாதேவப்பா துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாதேவப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதே ஆஸ்பத்திரியில் பசுவண்ணப்பா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இறந்த மாதேவப்பாவுக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள்.

இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த மாதேவப்பாவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Next Story