பன்றி காய்ச்சலை குணப்படுத்த 19¾ லட்சம் டாமிபுளூ மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்


பன்றி காய்ச்சலை குணப்படுத்த 19¾ லட்சம் டாமிபுளூ மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:30 PM GMT (Updated: 10 Nov 2018 5:06 PM GMT)

தமிழகத்தில் பன்றி காய்ச்சலை குணப்படுத்த அரசு மருத்துவமனைகளில் 19¾ லட்சம் டாமிபுளூ மாத்திரைகள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை, 

தமிழகத்தில் பன்றி காய்ச்சலை குணப்படுத்த அரசு மருத்துவமனைகளில் 19¾ லட்சம் டாமிபுளூ மாத்திரைகள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளனர். இதனையொட்டி டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். இங்கு பஸ் நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலை வகித்தார்.

பின்னர் பஸ் நிலையத்தில் பஸ், கார் போன்ற வாகனங்கள் சுத்தம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு கைகழுவும் பழக்கத்தை பற்றி முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதனை தொடர்ந்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்காக வைக்கப்பட்டு உள்ள வார்டுகளை நேரில் சென்று பார்வையிட்டு டாக்டர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் இதர காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அனைத்துத் துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பல மடங்கு டெங்கு குறைவாக இருந்த போதிலும், பருவநிலை மாற்றத்தினால் கடந்த அக்டோபரில் இருந்து காய்ச்சல் சற்று ஏற்று முகமாக இருந்து தற்போது அது மீண்டும் சமநிலைக்கு வந்து உள்ளது.

அதனால் தான் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பார்க்கப்பட்டதில் 95 சதவீதம் பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் சாதாரண காய்ச்சல் தான் உள்ளது.

இது தானாக மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை பெறும் போது சரியாகி விடும். ஆனால் 5 சதவீத காய்ச்சல் டெங்கு, பன்றி காய்ச்சல் போன்று கூர்ந்து கண்காணிக்கும் காய்ச்சல்களாக இருக்கலாம். இந்த காய்ச்சல்களும் மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை பெறும் போது எந்தவித பாதிப்புமின்றி, உயிர் சேதமின்றி காப்பாற்றபடலாம். இதில் 1 சதவீதம் நபர்களுக்கு மட்டுமே இந்த மாதிரி காய்ச்சல்கள் ஏற்படும் போது பாதிப்புகள் ஏற்படலாம். இதை தவிர்க்கும் நோக்கத்தில் தான் தொடர்ந்து விழிப்புணர்வு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை பெறுத்தவரை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அதிகளவில் மக்கள் கூட்டம் வர வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்து மக்கள் வருவார்கள். அப்போது ‘மே ஐ ஹெல்ப் யூ’ மையத்தில் இருந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கவும், பொது இடங்களில் லைசால் மூலமாக சுத்தம் செய்யும், கை கழுவும் பழக்கத்தைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தற்போது இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 6 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் உள்ளது. டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் உருவாக வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பிலும், அரசு அலுவலகங்களிலும் தேவையற்று கிடக்கும் பொருட்களில் நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் போலி மருத்துவர்களிடம் செல்லக் கூடாது. அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். பன்றிக் காய்ச்சல் மற்றும் பருவகால காய்ச்சல்களை தடுத்திட தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பன்றி காய்ச்சலுக்கு ‘டாமி புளூ’ என்ற மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொண்டால் இந்த நோயை எளிதாக குணப்படுத்தலாம். அரசு மருத்துவ நிலையங்களில் 19.75 லட்சம் ‘டாமி புளூ’ மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது. தனியார் மருத்துவமனையில் தேவைப்பட்டாலும் வாங்கி கொள்ளலாம்.

கடந்த 2017–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31–ந் தேதி வரை 23 ஆயிரத்து 900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 66 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்து 750 பேர் சிகிச்சை பெற்ற நல்ல நிலையில் வீடு திரும்பி உள்ளனர். 12 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் கடந்த 2017–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31–ந் தேதி வரை 3ஆயிரத்து 800 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 17 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 1100 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17 பேர் உயிரிழந்து உள்னனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த பிரச்சினை இதுவரை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story