கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் சப்-இன்ஸ்பெக்டர் மர்ம சாவு கழிவறையில் பிணமாக கிடந்தார்


கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் சப்-இன்ஸ்பெக்டர் மர்ம சாவு கழிவறையில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 10 Nov 2018 11:00 PM GMT (Updated: 10 Nov 2018 6:40 PM GMT)

கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் சப்-இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் கழிவறையில் பிணமாக கிடந்தார்.

நாகர்கோவில்,

சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் அதிகாலை 5.30 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வருவது வழக்கம். அதேபோல் நேற்று காலையிலும் இந்த ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தது. பயணிகள் இறங்கியதும் ரெயில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றது.

அங்கு பயணிகளை இறக்கி விட்ட பின்னர் சுத்தம் செய்வதற்காக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய பகுதியில் உள்ள யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள ஊழியர்கள் அனைத்து பெட்டிகளையும் சோதனை செய்து விட்டு, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குளிர்சாதன வசதி கொண்டு ரெயில் பெட்டி ஒன்றின் கழிவறையை ஊழியர்கள் சுத்தம் செய்ய சென்ற போது டிப்-டாப் உடையணிந்திருந்த ஒரு ஆண் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனே ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து நாகர்கோவில் ரெயில் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியாமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வேதப்பர் தெருவை சேர்ந்த தயாளன் (வயது 59) என்பதும், இவர் சென்னை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்ததும், பாதுகாப்பு பணி நிமித்தமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரெயிலில் வந்ததும் தெரிய வந்தது. குற்றப்பிரிவில் அவர் பணியாற்றியதால் மப்டி உடையில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.

இயற்கை உபாதை கழிக்க ரெயிலில் உள்ள கழிவறைக்கு தயாளன் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை.

பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும். இதுகுறித்து செங்கல்பட்டில் உள்ள தயாளனின் குடும்பத்தினருக்கு ரெயில்வே போலீசார் தகவல் கொடுத்து நாகர்கோவிலுக்கு வரவழைத்தனர். மேலும் இந்த மர்ம சாவு குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story