ஏர்வாடி அருகே காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு தடுக்க முயன்ற தம்பியும் படுகாயம்


ஏர்வாடி அருகே காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு தடுக்க முயன்ற தம்பியும் படுகாயம்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:30 PM GMT (Updated: 10 Nov 2018 6:53 PM GMT)

ஏர்வாடி அருகே காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. தடுக்க முயன்ற தம்பியும் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தார்.

வள்ளியூர், 

ஏர்வாடி அருகே காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. தடுக்க முயன்ற தம்பியும் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஒருதலைக்காதல்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி மாலதி. சொந்தமாக மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார். இவர்களுக்கு பிரியங்கா (வயது 19) என்ற மகளும், இசக்கி (17) என்ற மகனும் உள்ளனர்.

பிரியங்கா பி.எஸ்சி. படித்து முடித்து விட்டு, வங்கி பணிக்கான பயிற்சி வகுப்பிற்கு அடிக்கடி நெல்லைக்கு சென்று வந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த இசக்கியப்பன் என்பவருடைய மகன் இசக்கிமுத்து (21) பிரியங்காவை ஒருதலையாக காதலித்து வந்தார். தனது காதலை, பிரியங்காவிடம் இசக்கிமுத்து கூறினார். ஆனால் பிரியங்கா காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து கையில் வைத்திருந்த பிளேடால் பிரியங்காவின் முகத்தில் கிழித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

செல்போனில் தொல்லை

அதன்பிறகு இசக்கிமுத்து வேலைக்காக சென்னைக்கு சென்று விட்டார். அங்கிருந்தும் அடிக்கடி செல்போனில் பிரியங்காவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு இசக்கிமுத்து வந்தார். அப்போதும் செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் வேறு ஒரு செல்போன் எண்ணில் இருந்து பிரியங்காவை தொடர்பு கொண்டு மீண்டும் தனது காதலை ஏற்க கூறியதாக தெரிகிறது. அவரது காதலை ஏற்க பிரியங்கா மறுத்துவிட்டார்.

சரமாரி அரிவாள் வெட்டு

இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து நேற்று காலை பிரியங்காவின் வீட்டிற்கு சென்றார். அந்த சமயத்தில் பிரியங்காவின் தாயார் மாலதி வெளியே சென்றிருந்தார். வீட்டிற்குள் பிரியங்கா ஒரு அறையிலும், அவருடைய தம்பி இசக்கி மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

பிரியங்கா அறைக்குள் சென்ற இசக்கிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பிரியங்காவுக்கு கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு இசக்கி ஓடி வந்து தடுக்க முயன்றார். அப்போது இசக்கியும் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் அவரும் படுகாயம் அடைந்தார்.

வாலிபருக்கு வலைவீச்சு

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வரவே, இசக்கிமுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த 2 பேரையும் உறவினர்கள் மீட்டு, ஏர்வாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய இசக்கிமுத்துவை வலைவீசி தேடி வருகிறார். காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story