தேசிய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களுக்கு பயிற்சி நிறைவு


தேசிய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களுக்கு பயிற்சி நிறைவு
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 6:58 PM GMT)

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களுக்கு ஊட்டியில் 12 நாட்கள் நடைபெற்ற பயிற்சி நிறைவுபெற்றது.

ஊட்டி,

13 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை இமாச்சலபிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது. மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனி பிரிவாக போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரர்கள், வீராங்கனைகள் 24 பேர் சென்னை, சேலம், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழக அணிக்காக விளையாட ஊட்டி அருகே லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளி மாணவர் பிரனாய் ரெட்டி தேர்வாகி உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் இருந்து தமிழக அணியில் ஒரு வீரர் தேர்வானது தொடர்ந்து அவருக்கு பாராட்டு குவிகிறது. மேலும் தமிழக அணியில் இடம்பெற்ற 24 வீரர்களுக்கு ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம் மற்றும் லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளி மைதானத்தில் கடந்த 29-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 12 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம் நடை பெற்றது.

தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சங்கம், நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், வீரர்களுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பயிற்சியாளர்கள் பாலாஜி, குமரன், மகேஷ், குல்தீப்சிங் ஆகியோர் பயிற்சி அளித்தனர். கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடத்தில் பயிற்சி மேற்கொண்டால், வெளிமாநிலத்துக்கு சென்று விளையாடும் போது வீரர்களுக்கு கூடுதலாக புத்துணர்ச்சி கிடைக்கும். அதன் மூலம் புது இடத்தில் எளிதாக கூடைப்பந்து போட்டி விளையாடி வெற்றி பெற முடியும்.

ஊட்டியில் வீரர்கள் சிறப்பு பயிற்சி பெற்று நேற்று முன்தினம் காலை கோவையில் இருந்து விமானம் மூலம் இமாச்சலபிரதேசம் புறப்பட்டனர். அவர்களை தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சங்க துணை தலைவர் மோகன்குமார், நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் நாகராஜ், துணைத்தலைவர் ரவிக்குமார் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சங்க செயலாளர் ஆதவ அர்ஜூன் செய்திருந்தார்.

Next Story