நந்தம்பாக்கத்தில் சிகிச்சைக்கு வந்த பெண் அதிகாரியிடம் சில்மிஷம்; ராணுவ வீரருக்கு 2 ஆண்டு சிறை


நந்தம்பாக்கத்தில் சிகிச்சைக்கு வந்த பெண் அதிகாரியிடம் சில்மிஷம்; ராணுவ வீரருக்கு 2 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 10 Nov 2018 9:45 PM GMT (Updated: 10 Nov 2018 7:26 PM GMT)

நந்தம்பாக்கத்தில் சிகிச்சைக்கு வந்த பெண் அதிகாரியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் டிபென்ஸ் காலனியில் ராணுவ மருத்துவமனை உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி பிசியோதெரபி சிகிச்சைக்காக ராணுவத்தில் பயிற்சி பெற்ற பெண் அதிகாரி ஒருவர் இந்த மருத்துவமனைக்கு வந்தார்.

அப்போது பிசியோதெரபி பிரிவில் உதவியாளராக பணியாற்றிய திண்டுக்கல் மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரகாஷ்(வயது 35) என்பவர், பயிற்சி பெண் அதிகாரியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ராணுவ நீதிமன்றம், பிரகாசுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ராணுவத்தில் இருந்து அவரை பணிநீக்கம் செய்யும்படியும் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை ஏற்று ராணுவ வீரர் பிரகாசை, ராணுவத்தில் இருந்து பணிநீக்கம் செய்து தென் மண்டல ராணுவ கமாண்டர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவுபடி 2 ஆண்டு சிறை தண்டனையை நிறைவேற்றும்படி நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையின் முதன்மை பதிவாளர் கர்னல் ஜேக்கப், நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமாரிடம், ராணுவ வீரர் பிரகாசை ஒப்படைத்தார். அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story