அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி மாநகராட்சி ஊழியர் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி மாநகராட்சி ஊழியர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2018 10:00 PM GMT (Updated: 10 Nov 2018 7:29 PM GMT)

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை ராயபுரம் சோமு செட்டி தெருவில் வசித்து வருபவர் கருணாகரன் (வயது 53). இவர், சென்னை மாநகராட்சி 50-வது வார்டில் சுகாதாரத்துறையில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கருணாகரன், ராயபுரம் பகுதியில் நன்கு பழகியவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணனிடம் ராயபுரம் வீராசாமி தெருவைச் சேர்ந்த வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பாலசுந்தரம் என்பவர் புகார் அளித்து உள்ளார்.

ரூ.18 லட்சம் மோசடி

அந்த புகாரில் அவர் தனது மகன் மகேஷ் என்பவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2016-ம் ஆண்டு ரூ.2 லட்சம் வாங்கிக்கொண்டு வேலை வாங்கி தரவில்லை. இதேபோல ராயபுரத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் உறவினருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் உள்பட 7 பேரிடம் ரூ.18 லட்சம் வரை வாங்கி விட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் வேலை வாங்கித்தரவில்லை.

கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டால் தங்களை மிரட்டுவதாகவும் வீடியோ ஆதாரத்துடன் தெரிவித்து இருந்தார்.

கைது

அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய ராயபுரம் போலீசார், மாநகராட்சி ஊழியர் கருணாகரன் மீது பண மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் அவர், இதேபோன்று 60-க்கும் மேற்பட்டவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story