திருவாரூரில் பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


திருவாரூரில் பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 10 Nov 2018 10:15 PM GMT (Updated: 10 Nov 2018 7:32 PM GMT)

திருவாரூரில் பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வீடுகள், வணிக நிறுவனங்களில் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் பணிகளை நேரடியாக மேற்கொண்டு வருகிறார்.

இதில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 139 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருவாரூரை சேர்ந்த செல்வராணி (வயது42) என்ற பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரை டெங்கு என அனுமதிக்கப்பட்ட 26-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது ஒரு பெண்ணுக்கு மட்டும் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story