சேலத்தில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளிகள் 2 பேர் தற்கொலை


சேலத்தில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளிகள் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 10 Nov 2018 10:15 PM GMT (Updated: 10 Nov 2018 7:48 PM GMT)

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம், 

சேலம் சாமிநாதபுரம் அந்தோணிசாமி தெருவை சேர்ந்தவர் மரியபிரகாசம் (வயது 52). தொழிலாளி. இவருடைய மனைவி தர்ணத்மேரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மரியபிரகாசத்திற்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக ஏற்கனவே 2 முறை மரியபிரகாசம் தற்கொலைக்கு முயற்சித்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மரியபிரகாசம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமலைகிரி மொட்டையன் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (46). தொழிலாளி. இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சண்முகம் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி வீட்டில் சண்முகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதைப்பார்த்த அவருடைய குடும்பத்தினர் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story