நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2018 9:45 PM GMT (Updated: 10 Nov 2018 8:08 PM GMT)

நெல்லை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை, 

நெல்லை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு. இணைப்பு) சார்பில் நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் சிவன்ராஜ் முன்னிலை வகித்தார்.

நெல்லை மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். பயணப்படி நிலுவை தொகையை மாதந்தோறும் வழங்க வேண்டும்.

உடையும் மது பாட்டில்களுக்கு...

டாஸ்மாக் கடைகளில் உடையும் மதுபாட்டில்களுக்கு ஏற்படும் இழப்பீட்டு தொகைக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளை நவீன படுத்த வேண்டும். ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து கடைகளுக்கும் இன்சூரன்ஸ் உறுதி படுத்த வேண்டும். காலி அட்டை பெட்டிகளை டாஸ்மாக் நிர்வாகமே கடைகளில் பெற்று கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் மோகன், இணை செயலாளர் சுடலைராஜ், டாஸ்மாக் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சரவண பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கோஷங்கள்

தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜாராம், ஆவுடையப்பன், சிதம்பரம், சுப்பையா பாண்டியன், இளமுருகு, நல்லையா, முப்பிடாதி, நல்ல பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story