நெருல்-கார்கோபர் புதிய வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று தொடங்கி வைக்கிறார்


நெருல்-கார்கோபர் புதிய வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 10 Nov 2018 11:30 PM GMT (Updated: 10 Nov 2018 10:28 PM GMT)

நெருல் - கார்கோபர் புதிய வழித்தடத்தில் இன்று மின்சார ரெயில் சேவையை மத்திய மந்திரி பியூஸ் கோயல் தொடங்கி வைக்கிறார்.

மும்பை, 

நெருல் - கார்கோபர் புதிய வழித்தடத்தில் இன்று மின்சார ரெயில் சேவையை மத்திய மந்திரி பியூஸ் கோயல் தொடங்கி வைக்கிறார்.

புதிய வழித்தடம்

நவிமும்பை நெருல் - சீவுட் - உரண் இடையே 27 கி.மீ. தூரத்துக்கு மத்திய ரெயில்வே, நகர மற்றும் தொழில் மேம்பாட்டு கழகம் (சிட்கோ) இணைந்து ரூ.1,782 கோடி செலவில் புதிய ரெயில்வே வழித்தடத்தை அமைத்து வருகின்றன. இந்த திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன.

இதையடுத்து இந்த புதிய வழித்தடத்தில் 12 கி.மீ. தூரம் கொண்ட நெருல் - கார்கோபர் இடையே ரெயில் சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. புதிய வழித்தடத்தில் ரெயில் சேவையை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தொடங்கி வைக்கிறார்.

40 சேவைகள்

அதன் பின்னர் நாளை (திங்கட்கிழமை) முதல் பயணிகளின் சேவைக்காக மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும். நெருல் - கார்கோபர் இடையே இருமார்க்கத்திலும் தலா 10 சேவைகள் வீதம் 20 சேவைகளும், பேலாப்பூர் - கார்கோபர் இடையே இருமார்க்கத்திலும் தலா 10 சேவைகள் வீதம் 20 சேவைகளும் என மொத்தம் 40 சேவைகள் இயக்கப்பட உள்ளன. இதில் நெருல் - கார்கோபர் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் சீவுட், பாமன் ஆகிய ரெயில் நிலையங்களிலும் பேலாப்பூர் - கார்கோபர் இடையே இயக்கப்படும் சேவைகள் பாமன்டோங்கிரியில் மட்டும் நின்று செல்லும்.

தினசரி பேலாப்பூரில் இருந்து அதிகாலை 6.22 மணிக்கும், நெருலில் இருந்து காலை 7.45 மணிக்கும், கார்கோபரில் இருந்து காலை 6.50 மணிக்கும் முதல் சேவை இயக்கப்பட உள்ளது.

Next Story