சுங்குவார்சத்திரம் அருகே குவிந்து கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம்


சுங்குவார்சத்திரம் அருகே குவிந்து கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:30 PM GMT (Updated: 11 Nov 2018 5:44 PM GMT)

சுங்குவார்சத்திரம் அருகே குவிந்து கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சுங்குவார்சத்திரம் பகுதியில் திருமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். திருமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் துணிக்கடை, ஓட்டல்கள், மளிகை கடை, இறைச்சி கடை, பூக்கடை, காய்கறிகடை உள்ளிட்ட கடைகள் உள்ளன.

இங்கு உள்ள வியாபாரிகள் குப்பைகள், பூ மற்றும் இறைச்சி கடை கழிவுகளை தெருக்களில் கொட்டுகின்றனர். திருமங்கலம் ஊராட்சி நிர்வாகம் இந்த குப்பை, மற்றும் கழிவுகளை திருமங்கலத்தில் இருந்து கண்டிகை செல்லும் சாலையின் அருகே கொட்டுகின்றனர். இந்த சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் பார் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். அங்கு அதிக அளவில் பன்றிகள், நாய்கள் திரிகின்றன. குவிந்து கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் இந்த சாலையில் குப்பை கொட்டக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த எச்சரிக்கையை பின்பற்றாமல் குப்பை கொட்டப்படுவதால் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி திருமங்கலம் ஊராட்சியை தூய்மையான ஊராட்சியாக மாற்ற வேண்டும்.

இந்த பகுதி மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story