நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு தொடங்கியது


நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 11 Nov 2018 11:30 PM GMT (Updated: 11 Nov 2018 7:08 PM GMT)

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 2019-ம் ஆண்டு தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இதில் முதல்நாளன்று 550 பேர் முன்பதிவு செய்தனர்.

நாமக்கல், 
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினந்தோறும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு, 1008 வடைமாலை சாத்தப்படும். பின்னர் நல்ல எண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர் மற்றும் மஞ்சள், சந்தனம் போன்ற நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான செலவை பக்தர்கள் ஏற்று நடத்தி வருகின்றனர்.

இதுவரை அபிஷேக செலவை, 3 பேர் ஏற்கும் வகையில் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒருநாள் அபிஷேகத்தில் 5 நபர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி ஒரு நபருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2019-ம் ஆண்டுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் போட்டிபோட்டு முன்பதிவு செய்தனர்.

இது குறித்து கோவில் பணியாளர்கள் கூறியதாவது:-

முதல்நாள் அன்றே அடுத்த ஆண்டுக்கான விசேஷ நாட்கள், சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களுக்கு முன்பதிவு முடிவடைந்து விட்டது. முதல்நாளில் 550 பேர் தினசரி அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்து உள்ளனர். இதர நாட்களுக்கு பக்தர்கள் தொடர்ந்து முன் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story