விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்


விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:30 PM GMT (Updated: 11 Nov 2018 7:46 PM GMT)

தமிழக அரசு ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 26 சிறப்பு பள்ளிகளில் இருந்து 372 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இவர்கள் பகுதி வாரியாக கை, கால் ஊனமுற்றோருக்கான போட்டிகள், கண் பார்வையற்றவர்களுக்கான போட்டிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான போட்டிகள் மற்றும் காதுகேளாதோர்களுக்கான போட்டிகள் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

தனிநபர் போட்டியாக 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயமும், குண்டு எறிதலும், நின்ற நிலையில் தாண்டுதல், சக்கர நாற்காலி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் குழுப்போட்டிகளாக இறகு பந்து, கையுந்து பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 288 பேர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அருணா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story