பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குரூப்-2 தேர்வினை 8 ஆயிரத்து 837 பேர் எழுதினர்


பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குரூப்-2 தேர்வினை 8 ஆயிரத்து 837 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:45 PM GMT (Updated: 11 Nov 2018 8:04 PM GMT)

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வினை 8 ஆயிரத்து 837 பேர் எழுதினர்.

அரியலூர்,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடைபெறும் குரூப்-2 பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 941 பேரும் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான குரூப்-2 போட்டித்தேர்வு நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 21 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 20 மையங்களிலும் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 446 பேர், அரியலூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 391 பேர் என மொத்தம் 8 ஆயிரத்து 837 பேர் குரூப்-2 போட்டித் தேர்வினை எழுதினர்.

தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் எந்தவித சிரமமும் இன்றி மையத்திற்கு சரியான நேரத்துக்கு வர முடிந்தது. ஆனாலும் சிலர் தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்ததை காணமுடிந்தது. தேர்வு மையங்களில் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் தேர்வு எழுத வந்தவர்களில் சிலர் செல்போன்கள், கால்குலேட்டர் ஆகியவற்றை கொண்டு வந்திருந்தனர். அதனை தேர்வு மைய அதிகாரி பறிமுதல் செய்து, தேர்வு முடிந்தவுடன் அவர்களிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழூர் அழகப்பா அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு மையங்களில் கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணிக்கு முடிந்தது.

முன்னதாக தேர்வுகளில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 21 முதன்மை கண்காணிப்பாளர், 4 நடமாடும் குழுக்கள் தேர்வுப்பணிகளில் ஈடுபட்டனர். தேர்விற்காக துணை கலெக்டர் தலைமையிலான 2 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு மையங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அரியலூர் மாவட்டத்தில் துணை கலெக்டர் நிலையில் 2 பறக்கும் படைகளும், தாசில்தார் நிலையில் 2 நகரும் குழுக்களும், முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் 20 ஆய்வு அலுவலர்களும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2 அலுவலர்களும் தேர்வு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தேர்வு மையங்களில் தேர்வுப்பணிகள் அனைத்தும் வீடியோ எடுத்து காட்சிகள் பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் உடனடி சிகிச்சை அளிக்க 1 டாக்டர், 1 செவிலியர் கொண்ட மருத்துவ குழுவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story