மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 5,970 பேர் எழுதினர் 2,135 பேர் வரவில்லை


மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 5,970 பேர் எழுதினர் 2,135 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 11 Nov 2018 10:45 PM GMT (Updated: 11 Nov 2018 9:01 PM GMT)

கரூர் மாவட்டத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 5,970 பேர் எழுதினர். 2,135 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கரூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்பட்ட குரூப்-2 பணிக்கான எழுத்து தேர்வு கரூர் மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அரசு கல்லூரி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 27 மையங்களில் நேற்று நடந்தது. கரூர் மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 8,105 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5,970 பேர் மட்டும் நேற்று தேர்வு எழுதினர். 2,135 பேர் தேர்வு எழுத வரவில்லை.

காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வானது மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. தேர்வு மையங்களுக்குள் வெளிநபர்கள் யாரும் சென்று விடாத வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். எலக்ட்ரானிக் உபகரணங்களை பயன்படுத்தி தேர்வு எழுதுவது உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கும் விதமாக தேர்வானது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இந்த தேர்வை கண் காணிக்கும் பணியில் 27 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு குழுவிற்கு 5 நபர்கள் வீதம் 5 குழுக்கள் கொண்ட நடமாடும் கண்காணிப்பாளர்கள், 27 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 5 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வு எழுதுவோர் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய கரூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று சிறப்பு பஸ்கள் வசதியும், தேர்வு மையங்களில் பிரத்யேகமாக பஸ்களை நிறுத்திச்செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத ஏதுவாக தேர்வு கூடங்களில் தரைதளத்தில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

தாந்தோன்றிமலை அரசு கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களை மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? எனவும், அறையில் வெளிச்சமின்மை உள்ளிட்டவற்றின் காரணமாக தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏதும் உள்ளதா? என்பது குறித்து அறை கண்காணிப்பாளர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் ஈஸ்வரன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story