திருச்சியில் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.69 லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது


திருச்சியில் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.69 லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2018 10:15 PM GMT (Updated: 11 Nov 2018 9:23 PM GMT)

திருச்சியில் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.69 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

திருச்சி,

தேனி மாவட்டம் வடுகப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது48). திருச்சி பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த லூயிஸ் இருதயராஜ்(53), தேவநாதம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் ஆகியோருடன் ராஜ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தர தமக்கு அறிமுகமான ஆட்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாகவும் ராஜ்குமாரிடம் லூயிஸ் இருதயராஜ் தரப்பினர் தெரிவித்தனர். இதனை நம்பி கடந்த 2014-ம் ஆண்டு முதல் கடந்த 2016-ம் ஆண்டு வரை 33 பேரிடம் ரூ.69 லட்சத்தை வாங்கி லூயிஸ் இருதயராஜ், சிவக்குமார் ஆகியோரிடம் ராஜ்குமார் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்ற பின் 2 பேரும் வேலை வாங்கி தரவில்லையாம். மேலும் பணத்தை திருப்பி கேட்ட போது திருப்பி கொடுக்கவில்லை.

போலீசில் புகார்

இந்த நிலையில் ரூ.69 லட்சம் மோசடி செய்தது குறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்துவருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தலைமறைவான லூயிஸ் இருதயராஜை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story