சேரம்பாடியில்: கால்நடை ஆஸ்பத்திரிக்கு டாக்டர் நியமிக்கப்படுவாரா? - கிராம மக்கள் எதிர்பார்ப்பு


சேரம்பாடியில்: கால்நடை ஆஸ்பத்திரிக்கு டாக்டர் நியமிக்கப்படுவாரா? - கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 11 Nov 2018 9:45 PM GMT (Updated: 11 Nov 2018 9:57 PM GMT)

சேரம்பாடியில், கால்நடை ஆஸ்பத்திரிக்கு டாக்டர் நியமிக்கப்படுவாரா? என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா சேரம்பாடி, சுங்கம் காலனி, கண்ணம்பள்ளி, கோரஞ்சால், சப்பந்தோடு, நாயக்கன்சோலை, சோலாடி உள்பட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளாக உள்ளனர். இதனால் தங்களது வீடுகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

பசு மாடுகள் மூலம் கிடைக்கும் பாலை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நோய்களால் பாதிக்கப்படும் கால்நடைகளை சேரம்பாடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மக்கள் கொண்டு சென்று வருகின்றனர். ஆனால் கால்நடை ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர் நியமிக்கப்படவில்லை.

ஊட்டியில் உள்ள கால்நடை டாக்டர் ஒருவர் கூடுதல் பொறுப்பாக சேரம்பாடி ஆஸ்பத்திரியை கவனித்து வருகிறார். ஆனால் அவரும் பணிச்சுமை காரணமாக ஒருசில நாட்கள் மட்டுமே வருகிறார். மீதமுள்ள நாட்களில் டாக்டர் இல்லாததால் போதிய சிகிச்சை அளிக்காமல் கால்நடைகள் உயிரிழக்கும் அவலநிலை காணப்படுகிறது.

இதேபோல் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நடைபாதையும் பல இடங்களில் உடைந்து மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு கால்நடைகளை கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சேரம்பாடி கால்நடை ஆஸ்பத்திரியில் முழுநேர டாக்டரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆஸ்பத்திரிக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story