பொங்கலூரில், மகாலட்சுமி மகா யாகத்திற்காக 360 அடி நீள பிரமாண்ட யாகசாலை - இந்து முன்னணி சார்பில் அமைப்பு


பொங்கலூரில், மகாலட்சுமி மகா யாகத்திற்காக 360 அடி நீள பிரமாண்ட யாகசாலை - இந்து முன்னணி சார்பில்  அமைப்பு
x
தினத்தந்தி 11 Nov 2018 11:15 PM GMT (Updated: 11 Nov 2018 10:46 PM GMT)

பொங்கலூரில், மகாலட்சுமி மகா யாகத்திற்காக 360 அடி நீள பிரமாண்ட யாகசாலை இந்து முன்னணி சார்பில் அமைக்கப்படுகிறது.

பொங்கலூர்,

பொங்கலூர் பயணியர் தில்லைநகரில் அடுத்த மாதம் நடைபெறும் மகாலட்சுமி மகா யாகத்திற்கு 360 அடி நீளம், 60 அடி அகலத்தில் பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணி இந்து முன்னணி சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் உள்ள பயணியர் தில்லைநகரில் உலக நலன் வேண்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 23, 24 மற்றும் 25 ஆகிய 3 நாட்கள் மகாலட்சுமி மகா யாகம் நடைபெறுகிறது. முதல் நாளான 23-ந்தேதி காலையில் கஜபூஜை, 108 அஸ்வ யாக பூஜை ஆகியவை நடக்கிறது. அன்றைய தினம் மாலையில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

24-ந்தேதி சோடஷ மகாலட்சுமி மகா யாகமும், 1008 கோமாதா பூஜையும், மாலை 3 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணமும் நடை பெறுகிறது. 25-ந்தேதி காலை மகா யாக பூஜை தொடர்ச்சியும், பகல் 1 மணிக்கு பூர்ணாகுதியும் நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு ஒரு லட்சம் தம்பதியர் கலந்துகொள்ளும் மகாலட்சுமி யாகபூஜை நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பொங்கலூர் தில்லைநகரில் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து பிரமாண்ட யாகசாலை மற்றும் யாக குண்டம் ஆகியன அமைப்பதற்கான கால்கோள் விழா நடைபெற்று பணிகள் விரைந்து நடந்து வருகிறது. 360 அடி நீளம், 60 அடி அகலத்தில் பிரமாண்ட அளவில் யாக குண்டம் அமைக்கப்படுகிறது. விழாவை சிறப்பாக நடத்தி முடிக்க ஆன்மிகவாதிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் விதமாக தில்லைநகரில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

அலுவலகத்தை இந்து முன்னணியின் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அடுத்த மாதம் நடைபெறும் விழாவை மிகவும் சிறப்பாக நடத்தி முடிக்கவேண்டும். அதற்காக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் தம்பதிகள் கலந்துகொள்ளும் மகாலட்சுமி மகா யாக பூஜைக்கு தற்போது டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 60 ஆயிரம் டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

விழா குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) கோவையில் காந்தி பார்க் முருகன் கோவில் முன்பு இருந்து ரதயாத்திரை தொடக்க விழா நடைபெற உள்ளது. இதனை இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் தொடங்கி வைக்கிறார். இதில் மகாலட்சுமி ரதம், கோமாதா ரதம், சிவபார்வதி ரதம், வீரலட்சுமி ரதம் ஆகிய 4 ரதங்கள் புறப்பட உள்ளன.

இந்த ரதங்கள் கோவை, கோவை வடக்கு, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வலம் வர உள்ளது. இந்த ரத ஊர்வலத்தின் போது டோக்கன் வினியோகம் மற்றும் யாக சாலைக்கு ஒருவர் ஒரு செங்கல் வழங்கி தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டுகோள் வைக்கப்படும். யாக சாலைக்கு மொத்தம் 1½ லட்சம் செங்கல் தேவைப்படுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கவனிக்க சுமார் 5 ஆயிரம் தன்னார்வலர்கள் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளனர். 1008 கோமாதா பூஜைக்கு இதுவரை ஆயிரத்து 300 நாட்டு பசுமாடுகளும், 108 அஸ்வ பூஜைக்கு இதுவரை 130 குதிரைகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த விழாவில் மத்திய மந்திரிகள், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். விழா நடைபெறும் 3 நாட்களும் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story