ரெயிலில் பயணம் செய்த பெண்ணிடம் 4 பவுன் நகை-பணம் திருட்டு


ரெயிலில் பயணம் செய்த பெண்ணிடம் 4 பவுன் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 11 Nov 2018 9:30 PM GMT (Updated: 11 Nov 2018 10:53 PM GMT)

ரெயிலில் பயணம் செய்த பெண்ணிடம் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்,

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் போதிப்பு. இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது 27), மகள் முத்துநதியா (25). இவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் ஊழியர்களாக வேலை செய்கின்றனர். இவர்களது உறவினர் திருமணம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நேற்று நடந்தது. இதற்காக பாலகிருஷ்ணனும், முத்துநதியாவும், சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் இரவு பயணம் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4.15 மணிக்கு திண்டுக்கல் வந்த நிலையில், இருவரும் ரெயிலில் இருந்து இறங்கி உள்ளனர். இதையடுத்து, முத்துநதியா தன்னுடைய பையை பார்த்தபோது, அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.1,000 திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் திண்டுக்கல் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.
 அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story