காட்சிப்பொருளாக பேட்டரி கார்கள்
![காட்சிப்பொருளாக பேட்டரி கார்கள் காட்சிப்பொருளாக பேட்டரி கார்கள்](https://img.dailythanthi.com/Articles/2018/Nov/201811130059030161_Exhibit-battery-cars_SECVPF.gif)
ராமேசுவரத்தில் காட்சிப்பொருளாக இருக்கும் பேட்டரி கார்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் கார், வேன் உள்ளிட்ட பல வாகனங்கள் மூலமாக தமிழகம் மட்டுல்லாமல் இதியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதேபோல் ராமேசுவரம் கோவிலின் ரத வீதிகளுக்குள் அரசு பஸ் உள்ளிட்ட எந்தவொரு வாகனங்களும் செல்ல ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.மேலும் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் அனைத்து வாகனங்களும் ஜே.ஜே.நகர் பகுதியில் உள்ள திருக் கோவிலுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடம் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகளிலும் நிறுத்தி அங்கிருந்து பக்தர்கள் ரத வீதிகள் வழியாக சென்று வந்தனர்.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரத வீதிகள் வழியாக கோவில் வாசலில் இறங்கி சாமி தரிசனம் செய்துவர வசதியாக ராமேசுவரம் நகராட்சி மூலம் ரூ. 20 லட்சத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் ரத வீதி சாலையில் 5 பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வந்தன.இந்த பேட்டாரி கார் மூலம் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வந்தனர்.
ஆனால் இந்த பேட்டரி காரை நகராட்சி நிர்வாகமோ சரியாக பராமரிக்காதால் சில வருடங்களிலேயே பேட்டரி கார்களோ பழுதாகியது.மேலும் பழுதான பேட்டரிகாரை கூட சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவோ நகராட்சி நிர்வாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நகராட்சி அலுவலகத்தில் பேட்டரி கார்கள் காட்சி பொருளாக உள்ளன.
இந்நிலையில் ராமேசுவரம் நகராட்சி மூலம் 2–வது கட்டமாக ரூ.30 லட்சம் மதிப்பில் 5 பேட்டரி கார்கள் புதிதாக வாங்கப்பட்டு ராமேசுவரம் கொண்டு வரப்பட்டு அக்னிதீர்த்த கடற்கரை அருகே உள்ள நகராட்சி கட்டிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அந்த பேட்டரி கார்கள் கோவில் ரத வீதிகளில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படமால் உள்ளது.
எனவே 5 புதிய பேட்டரி கார்களையும் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.