நொய்யல் அருகே மொபட் மீது கார் மோதல்; காவலாளி பலி


நொய்யல் அருகே மொபட் மீது கார் மோதல்; காவலாளி பலி
x
தினத்தந்தி 12 Nov 2018 10:15 PM GMT (Updated: 12 Nov 2018 8:31 PM GMT)

நொய்யல் அருகே மொபட் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன காவலாளி பரிதாபமாக இறந்தார்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள செம்படாபாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 50). இவர் அய்யம்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வேலைக்கு தனது மொபட்டில் சென்று வருவது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் மாலையும் ராமமூர்த்தி தனது மொபட்டில், செம்படாபாளையத்தில் இருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

பலி

அய்யம்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ராமமூர்த்தி மொபட்டில் கடக்க முயன்றார். அப்போது கரூரில் இருந்த வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக ராமமூர்த்தி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது.

இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமமூர்த்தி படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ராமமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story