போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம்; கவர்னர் உத்தரவு


போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம்; கவர்னர் உத்தரவு
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 8:50 PM GMT)

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக நாளுக்குநாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தவிர்க்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த பிரச்சினை தொடர்பாக கவர்னர் கிரண்பெடி அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் போக்குவரத்துத்துறை செயலாளர் சரண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால், கவர்னரின் கூடுதல் செயலாளர் சுந்தரேசன், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ள கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்குமாறு அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

குறிப்பாக தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவது, 2 சக்கர வாகனங்களில் 3 பேர் செல்வது, அதிவேகத்தில் செல்வது, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்றவை தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக அபராதம் வசூலிக்க வேண்டும் என்று அதிகாரிகளை கவர்னர் அறிவுறுத்தினார்.


Next Story