நிலுவை சம்பளத்தை வழங்க கோரி ரேஷன் கடை ஊழியர்கள் சாலைமறியல்; 52 பேர் கைது


நிலுவை சம்பளத்தை வழங்க கோரி ரேஷன் கடை ஊழியர்கள் சாலைமறியல்; 52 பேர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2018 10:45 PM GMT (Updated: 12 Nov 2018 8:50 PM GMT)

நிலுவையில் உள்ள 15 மாத சம்பளத்தை வழங்க கோரி அரசை கண்டித்து, ரேஷன் கடை ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட 52 பேரை நகர போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்,

புதுச்சேரி அரசின் குடிமைபொருள் வழங்கல் துறையின் கீழ் இயங்கும், ரேஷன்கடை ஊழியர்களுக்கு, கடந்த 15 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஊழியர்கள் முற்றுகை, கஞ்சி தொட்டி திறப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் காரைக்காலை அடுத்த விழிதியூர் ரேஷன் கடையில் வேலை செய்துவந்த ஊழியர் சுரேஷ்(வயது38) என்பவர் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். நேற்று அதிகாலையில் மயக்கம் தெளிந்து எழுந்த சுரேஷ் தான் இன்னும் சாகவில்லை என்பதை அறிந்து, வீட்டின் உள்ளே தூக்குப்போட்டு மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை பார்த்த அவரது மனைவி கீதா, சத்தம் போட்டு உறவினர்கள் உதவியுடன் சுரேஷை காப்பாற்றி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி அறிந்த சக ஊழியர்கள், மருத்துவமனை அருகே ஒன்று கூடி, சுரேஷை தற்கொலைக்கு தூண்டிய புதுச்சேரி அரசை கண்டித்தும், 15 மாத சம்பளத்தை உடனே வழங்க வலியுறுத்தியும், நேற்று பகல் 12 மணிக்கு, காரைக்கால் அரசு மருத்துவமனை அருகில் உள்ள காமராஜர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த காரைக்கால், திருநள்ளாறு நகர போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஊழியர்கள் சமாதானம் ஆகாமல் போராட்டத்தை தொடர்ந்ததால், போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேரை கைது செய்தனர்.

Next Story