கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர் - 3,200 போலீசார் பாதுகாப்பு


கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர் - 3,200 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 9:42 PM GMT)

சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை காண்பதற்காக திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூர், 


அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வருகின்றனர்.
விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது.

6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.
மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைகிறார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்கிறார். பின்னர் சிங்கமுகமாகவும், தன்முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்கிறார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி தன்னுடன் ஆட்கொள்கிறார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார்.

சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்கின்றனர். இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் (கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்த வந்த வண்ணம் உள்ளனர். சிவன், பார்வதி, முருகபெருமான், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் வேடங்களை அணிந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது.

சூரசம்ஹாரம் முடிந்ததும் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணி, இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது. சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் எளிதில் காணும் வகையில், கடற்கரை முழுவதும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. கோவில் வளாகம், பஸ் நிலையம் உள்ளிட்ட 10 இடங்களில் சூரசம்ஹார நிகழ்ச்சியை நேரடியாக காணும் வகையில் பிரமாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர் நகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து, அதில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

திருச்செந்தூர்-பாளையங்கோட்டை ரோடு, தூத்துக்குடி ரோடு, கன்னியாகுமரி ரோடு, சாத்தான்குளம் ரோடு ஆகியவற்றில் புறநகர் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில், சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

Next Story