நெல்லை அருகே லாரி–பஸ் மோதல்: காயம் அடைந்த மேலும் ஒருவர் சாவு பலி எண்ணிக்கை உயர்வு


நெல்லை அருகே லாரி–பஸ் மோதல்: காயம் அடைந்த மேலும் ஒருவர் சாவு பலி எண்ணிக்கை உயர்வு
x
தினத்தந்தி 13 Nov 2018 9:30 PM GMT (Updated: 13 Nov 2018 1:13 PM GMT)

நெல்லை அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் இறந்தார்.

நெல்லை, 

நெல்லை அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் இறந்தார். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 4–ஆக உயர்ந்து உள்ளது.

லாரி–பஸ் மோதல்

கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. நெல்லை அருகே தாழையூத்து பானாங்குளம் பகுதியில் வந்த போது, சாலையோரத்தில் நின்ற லாரியின் மீது மோதியது. இதில், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த சுப்பையா (வயது 55), அவரது மகள் சுகன்யா (21), ரமேஷ் ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் 25–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் ஒருவர் சாவு

இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரியை சேர்ந்த முருகன் மகன் ராபின் (18) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4–ஆக உயர்ந்து உள்ளது.

இதுகுறித்து தாழையத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story