காஞ்சீபுரத்தில் மறியலில் ஈடுபட்ட மின்ஊழியர்கள் 400 பேர் கைது


காஞ்சீபுரத்தில் மறியலில் ஈடுபட்ட மின்ஊழியர்கள் 400 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2018 10:30 PM GMT (Updated: 13 Nov 2018 6:50 PM GMT)

காஞ்சீபுரத்தில் மறியலில் ஈடுபட்ட மின்ஊழியர்கள் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மின் வட்ட கிளை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு. சார்பில், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் காஞ்சீபுரம் கங்கைகொண்டான் மண்டபம் அருகே நடந்தது.

இந்த போராட்டத்தில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய், அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒப்பந்தப்படி ரூ.380 கூலி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு மாநில துணை தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாநில செயலாளர் இந்திய தொழிற்சங்க மாநில செயலாளர் முத்துகுமார், காஞ்சீபுரம் சி.ஐ.டி.யு. மாவட்ட முன்னாள் செயலாளர் வாசுதேவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேரை கைது செய்தனர்.

Next Story