வடமதுரை அருகே பயங்கரம்: ஓட, ஓட விரட்டி பெண் வெட்டிக்கொலை - உறவினர்கள் சாலை மறியல்


வடமதுரை அருகே பயங்கரம்: ஓட, ஓட விரட்டி பெண் வெட்டிக்கொலை - உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 7:26 PM GMT)

வடமதுரை அருகே வட்டிக்கு பணம் கொடுத்து வந்த பெண் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த நல்லமனார்கோட்டை அருகே உள்ள சொட்டமாயனூரை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி மனைவி மஞ்சுளா (வயது 43). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார். நேற்று மஞ்சுளா திண்டுக்கல் சென்றுவிட்டு மாலை 4.30 மணியளவில் ஊருக்கு வருவதற்காக திருக்கண் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அதில் இருந்து இறங்கி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மஞ்சுளாவை ஓட, ஓட விரட்டினர்.

இதனால் பயத்தில் மஞ்சுளா அதே பகுதியில் உள்ள பெருமாள் என்பவரின் வீட்டருகே ஓடினார். எனினும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விடாமல் துரத்தி சென்று அவரின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். இந்தநிலையில் படுகாயமடைந்த மஞ்சுளா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் திண்டுக்கல்-கரூர் சாலையில் திருக்கண் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திண்டுக்கல் டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர் தெய்வம், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா திலகராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1½மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் துப்புதுலக்குவதற்காக மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து எரியோடு சாலையில் புதுநகர் பகுதியில் உள்ள நாச்சிமார் கோவில் வரை ஓடிச்சென்று நின்றது. யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை. எனவே கொலையாளிகள் அந்த வழியாக தப்பிச்சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மஞ்சுளா வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினையினால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story