பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.38 ஆயிரம் பறிப்பு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை


பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.38 ஆயிரம் பறிப்பு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 8:24 PM GMT)

பொன்னமராவதியில் பட்டப்பகலில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.38 ஆயிரத்தை பறித்து சென்ற மர்மநபர் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயலை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். இவரது மனைவி செல்வி (வயது 39). இவர் நேற்று காலை பொன்னமராவதி கடைவீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தனது கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வந்தார். வங்கியில் ரூ.38 ஆயிரத்து 500-ஐ எடுத்தபின் அதனை ஒரு மஞ்சப்பையில் வைத்தார். மேலும் பணத்தை பத்திரமாக பாதுகாப்பாக கொண்டு செல்லும் வகையில் அதனை ஒரு கூடையில் வைத்திருந்தார்.

வங்கியில் இருந்து வெளியேறிய அவர், கூடையுடன் கடைவீதியில் நடந்து சென்றார். அந்த நேரத்தில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஒருவர், செல்வியிடம் அவரது சேலையில் அசிங்கம் ஒட்டியிருப்பதாக கூறி அவரது கவனத்தை திசை திருப்பினார். இதனால் அவர் யதார்த்தமாக கையில் வைத்திருந்த கூடையை தரையில் வைத்துவிட்டு சேலையின் பின்பக்கம் பார்த்தார். அப்போது அதில் வாந்தி எடுத்தது போல திரவம் ஒட்டியிருந்தது. இதனால் அவர் அதனை துடைக்க முயன்றார். அப்போது அந்த மர்மநபரும் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவுவது போல நடித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செல்வி கூடையில் பணம் வைத்திருந்த மஞ்சப்பையை மர்மநபர் எடுத்துக்கொண்டு தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி, திருடன்... திருடன்... என அபய குரல் எழுப்பினார். ஆனால் மர்மநபர் சிட்டாக பறந்து தப்பியோடி தலைமறைவாகினார்.

பணத்தை பறிகொடுத்த செல்வி நேரடியாக பொன்னமராவதி போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். இதைதொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.

அப்போது வங்கிக்குள் செல்வி நுழைவதும், பணம் எடுப்பதும், பையில் வைக்கும் காட்சியும் பதிவாகி இருந்தது. அதேநேரத்தில் செல்வியை மர்மநபர் ஒருவர் நோட்டமிடும் காட்சியும், அவரை பின்தொடர்ந்து செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது. இந்த காட்சியை பார்வையிட்ட செல்வியும், தன்னிடம் பணம் பறித்த நபர் இவர் தான் என அடையாளம் காட்டினார். அவர் யார்? என தெரியவில்லை. அவர் சாதாரணமாக கைலி மற்றும் முழுக்கை சட்டை அணிந்திருந்தார். இதனால் அவர் உள்ளூர் அல்லது பக்கத்து கிராமத்தை சேர்ந்த நபராக இருக்கலாம் என போலீசார் கருதி விசாரித்து வருகின்றனர். மேலும் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடை வீதியில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.38 ஆயிரத்து 500-ஐ பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Next Story