திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 13 Nov 2018 10:15 PM GMT (Updated: 13 Nov 2018 9:03 PM GMT)

நர்சிங் மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தம்பி-தங்கை மற்றும் தோழிகளுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

திருச்சி,

திருச்சி பெரியகொத்தமங்கலம் ராம்ஜிநகர் குடித்தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் ஜென்சிபிரியா(வயது 22). இவர் டிப்ளமோ நர்சிங் படித்து கொண்டே திருச்சி தென்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலையும் பார்த்து வந்தார். கடந்த 11-ந் தேதி ஜென்சிபிரியாவுக்கு ஆஸ்பத்திரியில் இரவு நேரப்பணி வழங்கப்பட்டிருந்தது.

அன்று இரவு பணி முடித்து விட்டு நேற்று முன்தினம் காலை 9.45 மணிக்கு வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். மாலை 4 மணி ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. அவரது தம்பி எழுப்பி பார்த்தும் எழுந்திருக்கவில்லை. இதனால், பதறிபோன அவரது குடும்பத்தினர் ஜென்சிபிரியாவை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் உள்ள படுக்கை அறையில் போலீசார் சோதனை செய்தபோது, ஊசி போட்டதற்கான சிரிஞ்சி மற்றும் மருந்து பாட்டில் கிடந்தது. இதன் பின்னரே, ஜென்சி பிரியா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும், படுக்கை அறையில் தம்பி, தங்கை மற்றும் தோழிகளுக்கு தனித்தனியாக எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது.

தம்பி, தங்கைக்கு எழுதிய அந்த கடிதத்தில், “இனி நீங்கள்தான் அப்பா-அம்மாவை காப்பாற்ற வேண்டும். அவர்களை தவிக்க விட்டு விடாதீர்கள். நான் இந்த உலகத்தை விட்டே செல்கிறேன். அப்பா-அம்மா சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள். அதுதான் நல்லது” என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. தோழிகளுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த உலகத்தில் வாழ்வதற்கு எனக்கு பிடிக்கவில்லை. எனவே, உலகத்தை விட்டு செல்கிறேன்” என கூறப்பட்டு இருந்தது.

நர்சிங் மாணவி ஜென்சிபிரியா எதற்காக விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. தனியார் ஆஸ்பத்திரியில் இரவு பணி காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முடிவை எடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜென்சி பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ராம்ஜிநகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story